Thursday, January 5, 2017

Sri sellandi amman kovil

கார்வழி செல்லாண்டியம்மன் கோயில்

     அழகு குலத்தாரின் குலக்கோயிலான கார்வழி செல்லாண்டியம்மன் கோயில்.  அமைதியான, சுற்றிலும் வீடுகள், விளைநிலங்கள் அற்ற புன்செய் நிலப்பகுதியில் கோயில் அமைந்திருக்கிறது. பெரியதொரு வளாகம். வளாகத்தைச் சுற்றி மூடியதுபோல, கோட்டைச்சுவரை நினைவு படுத்தும் வகையில் கற்களால் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவர். பெரிய கருங்கற்களை, எந்தவிதமான ஒட்டுப்பொருளும் இல்லாமல் அப்படியே ஒன்றை ஒன்று அடுத்து அடுக்கியும், ஒன்றன்மேல் ஒன்று உயர அடுக்கியும் சுவர் எழுப்பியுள்ளனர். ஏறத்தாழ பத்து வரிசை உயரம் இருக்கும் அளவு கட்டப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கற்கள் பெயர்ந்து விழுந்து விட்டமையால் ஆறு,ஏழு வரிசைகள் காணப்படுகின்றன. வெறும் கற்களைக்கொண்டே அமைக்கப்பட்ட கட்டுமானத்தைப் பார்த்தாலே, கோயிலின் பழமை புலப்படுகிறது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு அடிப்படைப் பகுதிகளைக்கொண்டு கோயில் விளங்குகிறது. அடித்தளப்பகுதி, கல் கட்டுமானத்தில் அமைந்துள்ளது. ஜகதி, பதுமம், சிறிய முப்பட்டைக்குமுதம், மேலே கண்டப்பகுதி போன்ற ஒரு அமைப்பு அடித்தளத்தில் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தை அடுத்து, தற்காலத்தே கட்டப்பெற்ற மகா மண்டபம் இரும்புக்குழல் தூண்களும், மேலே உலோகக் கூரையும் கொண்டுள்ளது.

அம்மன் சிலையும் கோயிலின் பழமையும்

செல்லாண்டியம்மன் சிலை, எட்டுக்கைகளுடன் கூடிய ஒரு காளி என்னும் கொற்றவையின் தோற்றத்தை ஒத்துள்ளது. தலையில் தீப்பிழம்பின் முடி (ஜுவாலா முடி), விரிந்த பெரிய கண்கள், தடித்த நீள்மூக்கு, தடித்த இதழ், இதழோரத்தில் கீழ்நோக்கி வளைந்த கோரைப்பற்கள் என்று சினந்த முகத்துடன் காணப்படுகிறது. காதுகளில் தோடு உள்ளது. கை மணிக்கட்டில் வளைகள் உள்ளன. கழுத்தணிகளைக்காண இயலவில்லை. புடவை சாத்தப்பட்டிருந்தது.  வலது முன்கையில் பெரியதொரு சக்தி ஆயுதமும், இடது முன்கையில் ஒரு கும்பமும் காணப்படுகின்றன. மற்ற ஆறு கைகளில், வலப்புறமுள்ள மூன்று கைகளில் ஒன்றில் மானை ஏந்தியிருக்கிறாள்; மற்றொன்றில் மனிதத் தலையை ஏந்தியிருக்கிறாள்; மூன்றாவது கை மூடிய நிலையில் உள்ளது. அதேபோல், இடப்புறமுள்ள மூன்றுகைகளில் ஒன்றில் உடுக்கையையும், மற்றொன்றில் மணியையும் ஏந்தியிருக்கிறாள்; மூன்றவதில் என்ன இருக்கிறது என்பது புலப்படவில்லை. வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்கவிட்டு ஒரு அரக்கனின் காலை மிதித்துக்கொண்டிருப்பதுபோல் வைத்திருக்கிறாள். மொத்தத்தில், காளிக்கே உரிய கொடுமை நிறைந்த தோற்றம். சிற்பத்தின் வடிவமைப்பு, அதன் காலம் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைகொண்டது எனக் கருத இடமளிக்கிறது. கோயிலின் பழமை, கட்டுவித்தவர் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளக் கல்வெட்டுச் சான்றுகள் எவையுமில்லை. நண்பர் ஒருவர் குறிப்பிட்டதுபோல், சிற்பத்தின் பின்புறம் எழுத்துப் பொறிப்புகள் இல்லை. கொங்குநாடு முழுமையும் தாய்த்தெய்வ வழிபாடே மிகுந்து விளங்கியது என்னும் அடிப்படைக்கருத்து கொண்டு நோக்கும்போது, கோயில் பழமையானதொன்று என்பதில் ஐயம் இல்லை.

2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்விடம்

கோயிலின் அருகிலே சற்றுத் தொலைவில், பெருங்கற்காலம் என்று தொல்லியலார் குறிப்பிடும் காலத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்விடம் இருந்ததற்கான சில சான்றுகள் கிடைத்தன. 1800 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய, சிவப்புப்பானை ஓட்டுச்சில்லுகள் நிறையக் காணப்பட்டன. இரும்பு பயன்படுத்தப்பட்ட அடையாளங்களாகக் கருதப்படும் இரும்புக்கழிவுகளும் கிடைத்தன. கோயிலுக்கருகிலேயே, இதே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமப்பொருளான முதுமக்கள் தாழி என்னும் பானையின் ஓட்டுத் துண்டுகள் கிடைத்தன. மக்கள் வாழ்விடத்தில் கிடைத்த பானை ஓட்டுச் சில்லுகள் மெல்லியவை. ஆனால், இந்த ஈமப்பானைகளின் ஓடுகள் தடித்தவை. எனவே, கார்வழியும் கார்வழிக்கோயிலும் அமைந்துள்ள இந்த இடம், மிகப்பழமையானது என்பதை இங்குக்கிடைத்த மேலோட்டமான சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. தொல்லியல் துறையினர் இவ்விடத்தைப் பார்வையிட்டால், இந்த இடம் அகழாய்வு செய்யத்தகுந்ததா என்பதை அறிய இயலும்.